கவிபாரதி சிறுகதைகள்

Thursday 20 September 2012

புதிர் பூக்கள்- பாகம் I

வெயில் ஊரை வெளுத்துக் கொண்டிருந்தது. காய்கறி வாங்கிக் கொண்டு வியர்க்க விறுவிறுக்க திலகா வீடு வந்து சேர்ந்தாள். தொண்டை குழி வற்றிப் போய் வந்தவள், கதவை தட்டினாள்.

கவிதா.. கவிதா... கதவ திறமா..

உள்ளிருந்து சப்தமேதும் இல்லை. சில நிமிடங்கள் பொறுமையாய் இருந்த திலகாவிற்கு பயம் பிடித்தது. உள்ளிருந்து கதவு தாழிடப் பட்டிருந்தது. கவிதாவின் அலைப் பேசிக்கு தொடர்பு கொண்டாள். தற்சமையம் தொடர்பு கொள்ள முடியாது என்றது. மகளுக்கு என்னவானதோ என்று பதறிய திலகா, அக்கம் பக்கம் யாராவது இருக்கிறார்களா என்று பார்த்தாள்... யாருமில்லை.

அந்த தெருவில் 20 குடும்பங்கள் வாழ்தாலும், ஒருவரோடு ஒருவர் பேசிக்கொள்வதே பேரதிசயம். மகள் கதவை திறந்து விடுவாள் என்ற எதிர்பார்ப்போடு, மீண்டும் மீண்டும் தட்டினாள். நிமிடங்கள் ஓடிக் கொண்டிடுந்தன. நேரம் ஆக ஆக, பதட்டமும் பயமும் அதிகமானது. இனிமேலும் தாமதிக்கக் கூடாதென்று முடிவெடுத்தவள், வேகமாய் கவிதாவின் அப்பாவை அழைக்க முற்பட்டாள்.

கவிதாவின் அப்பாவிடமிருந்தும் பதில் வரவில்லை. அவர் அலுவல் காரணமாக சில சமயம் அலை பேசியை அணைத்து வைப்பது வழக்கம். இப்போது திலகா செய்வதறியாது விழித்தாள்..

கண்களில் கண்ணீர் பெருக்கெடுக்க தொடங்கியது. தலை சுற்றுவது போல் தோன்ற, வீட்டுத் திண்ணையில் சாய்ந்து உட்கார்ந்தாள்.

பக்கத்து வீடுகளில் விசாரித்த போது, யாரும் பயன் படுகிற மாதிரி பதில் தரவில்லை.. அங்கிருந்த சில பேர் கதவை உடைக்க ஆரம்பித்தனர்...  நிமிடங்கள் ஆனது... அதுவரை திலகா அப்டி ஒரு நரகத்தில் இருந்ததே இல்லை...மனதுக்குள் என்னவெல்லாமோ ஓட ஆரம்பித்தது.

ஒரு வேலை கவிதா யாரையேனும் காதலித்து, ஏமாற்றப்பட்டு... மனமுடைந்து.... ச்சி..ச்சி இருக்காது... கல்லூரியில் ஏதாவது தகராறு.... வேறு ஏதாவது  செய்திருந்து.. குற்ற உணர்வால்....அய்யோ... கடவுளே அப்படியெல்லாம் ஒன்றும் ஆகி இருக்கக் கூடாது..

எதோ புது சக்தி வந்தவள் போல் எழுந்து கொண்டு, மீண்டும் கதவை தட்டினாள்.  இந்த முறையும் வெறுமையே அவளை அறைந்தது. வீட்டில் இருக்கும் இன்னொமொரு சாவியை எடுத்துக் கொண்டு போய்  இருக்க வேண்டும் என்று அவள் அறிவு அவளை திட்டியது..

மதியம் 12 மணியளவில் வீட்டுக்கு வந்தவள், 5 மணியாகியும் வாசலில் பேய் அறைந்தவள்  போல் கிடந்தாள். இப்போது கொஞ்சம் தைரியம் வந்தது இருந்தது. கவிதாவின் அப்பா  நேரமானது. காவல் நிலையம் போக தைரியம் இல்லாமலும்.. அப்படி போனால் தன மகள் மீது ஏதாவது பழி விழுந்துவிட கூடுமென்றும், உயிரை கையில் பிடித்துக் கொண்டு காத்திருந்த தரும் முடியப் போகிறது.. சோர்வும் சோகமும் சேர்ந்து திலகாவை கொல்ல, செய்வதறியாது தவித்தாள்..

கணவன் வந்ததும் எப்படியாவது மகளை கண்டு பிடித்து, அவள் கன்னத்தில்  நான்கு அறைய வேண்டும் போல்  இருந்தது...

கவிதாவின் அப்பா வீடு வரும் போது, மணி  6 ஆகி இருந்தது.. சற்று இருட்ட தொடங்கி இருந்தது.. நெஞ்சம் படபடக்க, பைத்தியம் பிடித்தவர்கள் போல், தெருவிலும், அக்கம் பக்கத்திலும் தேடி களைத்தனர்...

இறுதியை இருந்த ஒரே  வழி.... காவல் நிலையத்தில் புகார்  கொடுப்பது... அது வரை காவல் நிலையத்தின் உட்பகுதியை சினிமாவில் மட்டும் பார்த்திருந்த திலகாவிற்கு, அந்த சூழல் இன்னும் பயத்தை கூட்டியது.


உள்ளே நுழைந்தர்வர்கள், அங்கு பணியில் இருந்த அதிகாரியிடம் கதறி அழுதனர்....

"சார்... என் பேரு ஆனந்தன்.. சிவகாமி அவன்யூல 49ஆம் வீட்ல குடி இருக்கேன்.. என் மகளை இன்னிக்கு மதியத்திலிருந்து காணோம்.." சொல்ல சொல்ல.. தொண்டை அடைத்தது....

"முதல்ல உட்காருங்க சார்.... பொறுமையா இப்போ சொன்னதெல்லாம் ஒரு பேப்பர்ல எழுதி கொடுங்க... ஆக்க்ஷன் எடுக்கறேன். பதறாதீங்க உங்க பொண்ணு பத்திரமா இருப்பா"

அவர் சொன்னபடி எழுதி கொடுத்து விட்டு, வீடு திரும்பினர்.. உண்ண மனமில்லாமல், உறங்கவும் கண்கள் ஒத்துழைக்காமல்... இரவு கடந்தது!

 ஏன் தான் காலை வந்ததென்பது போல் இருந்தது... இருவருக்கும் அழுது அழுது கண்கள் வறண்டிருந்தன....

"சார் நான் ஆனந்தன் பேசறேன், ஒரு பர்சனல் வேல இருக்கு.. இன்னிக்கு ஆபீஸ் வர முடியாது லீவ் சொல்லிடுங்க ப்ளீஸ்... ரொம்ப நன்றி சார்..."

அலை பேசியை துண்டித்து முடித்தவுடன், அழுகை பொத்துக் கொண்டு வந்தது...

யாரிடமாவது சொல்லி ஓவென்று அழவேண்டும் போல் தோன்றியது.. யாரிடம் சொல்வது..

ஏற்கனவே பக்கத்துகாரர்கள் ஏகத்துக்கு பேசுகிறார்கள்... சொந்தக்காரர்களுக்கு தெரிந்தால்.... மகளின் வாழ்க்கை பாழாய்  போய்விடும்.. உண்மை நிலவரம் அறியாது, யாருக்கும் சொல்ல வேண்டாம் என்று முடிவெடுத்தனர்...


10 நாட்கள் கடந்திருந்தன... எந்த நல்ல தகவலும் இல்லை.. திலகவோ பாதி இறந்தே போய் இருந்தாள்.. மகள் உயிரோடு இருக்கிறாளா.. இல்லையா என்று கூட தெரியாத கவலையில், ஆனந்தனின் முகம் 10 வயது கூடியது போல் தெரிந்தது.. அன்று வரை அவர் அப்படி தாடி வளர்த்ததில்லை...

வீடு முழுதும் அமைதி.. சிம்மாசனமிட்டிருந்தது.... தேதி கூட கிழிக்கப் படாமல்... வாசல் தெளிக்கப் படாமல்.... வீட்டின் ஒவ்வொரு சுவரும் கவிதாவின் இல்லாமையை கத்தி கத்தி சொன்னது...

11ஆவது நாள், ஆனந்தனின் பெயருக்கு ஒரு கடிதம் வந்தது... அதில் அனுப்புனர் முகவரி இல்லை..

அன்புள்ள அம்மா அப்பாவிற்கு, உங்கள் செல்ல மகளாய் இருந்த கவிதா எழுதுவது..

என்னை நீங்கள் இருவரும் மன்னிக்கவே மாட்டீர்கள் என்று தெரியும். இருந்தாலும் உங்களிடம் மன்னிப்பு கேட்கவே இக்கடிதம். எனக்கு உயிர் கொடுத்து இந்த வாழ்க்கையை கொடுத்தவர்கள் நீங்கள் இருவரும். உங்களது நிழலில் மீண்டும் இருக்க மாட்டேனா என்று தான் நானும் தவிக்கிறேன்.

நான் வீட்டை விட்டு  வெளியேறியமைக்கு ஒரு காரணம் இருக்கிறது. ஆனால் சத்தியமாய் சொல்கிறேன்... யாருடனும் ஓடிப் போகவில்லை.. எந்த தவறும் செய்யவில்லை... காரணத்தை எழுதாமைக்கு மன்னிக்கவும். நான் இன்றளவும் உங்கள் அன்பு மகளாய் தான் எதோ ஒரு மூளையில் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். சில நாட்களாகவே வீட்டை விட்டு போக எண்ணி இருந்தேன்... சந்தர்ப்பம் அமையவில்லை...அன்று அம்மா கடை வீதிக்கு போன போது, கதவை உள்ளே தாழிட்டு விட்டு, பின் வழியாக சென்று விட்டேன். நான் செய்த இந்த மன்னிக்க முடியா குற்றத்திற்காக வருந்துகிறேன்.. என்னை தேட முயற்சிக்க வேண்டாம். ஒரு வேலை பபுகார் ஏதும் கொடுத்திருந்தால், அதை திரும்ப பெற்று கொள்ளவும்.. நீங்கள் ஏதாவது முயற்சி செய்தால், நான் தற்கொலை செய்து கொள்வேன்..

இப்படிக்கு,
கவிதா..

                                                                                             (தொடரும்...)

Thursday 27 October 2011

சூடு

அன்று மழை நடத்திய போரில் மணிக்கணக்காய் நனைந்திருந்தது பூமி.  நான் ரயிலில் பயணித்து கொண்டிருந்தேன். ஜன்னல் இருக்கையாதலால், கண்ணாடி கதவு வழியாக, மழையை ரசித்து கொண்டிருந்தேன். அன்றைய ரயில் பயணம் எப்போதும் போல போய்க் கொண்டிருந்தது.... சில கிராமங்களை கடந்து, மணல் வெளிகளை கடந்து.... 

அன்று மழை பெய்ததாலோ என்னவோ, வயற்காடுகள் எல்லாம் பசுமையாய்... அழகாய் கண்களில் நின்று, அகல மறுத்தன.. 

ஒவ்வொரு முறை குடுசை பகுதிகளை கடக்கும் போதும், வாசலில் சிறுவர்கள் நின்று கொண்டு ரயிலை பார்த்து, கை அசைத்துக் கொண்டிருந்தார்கள்.. நானும் அப்படி செய்ததுண்டு. யார் யாரென்றே தெரியாத போதும், ரயிலில் பயணிப்போருக்கு கை காட்டி மகிழ்ந்ததுண்டு.... 
இப்போது அந்த கிரமியமும், குழந்தை தனமும் எங்கே போனது... யோசித்தேன், கண்களில் ஏக்கம் பெருகியது. 

அதிலிருந்து மீள்வதற்குள், சிறுமிகள் இரண்டு பேர் குளத்தில் கப்பல் விடுவதை கண்டேன்... சுத்தமான காற்று, சுகமான வாழ்க்கை... அவர்கள் மீது லேசாய் பொறாமை கொண்டேன்...

கொஞ்சம் கொஞ்சமாய் அழிந்து வரும் கிராமங்களோடு, இது போன்ற சின்ன சின்ன சந்தோஷங்களும் அழிந்து வருகிறதோ?? நினைத்து பார்க்கையில், தலையில் இடி இறங்கியது... 

யோசித்துக் கொண்டே என் நிறுத்தத்தில் இறங்கி, என் தோழியும் நானும் தங்கியிருக்கும் வீட்டுக்கு சென்றேன். 

"உலகம் வேப்பமயமாதலையும், நகரமயமாதலையும் தடுக்கவே முடியாதா சுசி ???".... 

"ஏன் இப்போ இத பத்தி கேக்கற?" என்றாள்... 

"இல்ல, நாம வாழறதுக்காக அடுத்த தலைமுறையோட எதிர் காலத்தை கேள்விக்குறியாக்கிட்டு வரோம்... இது ஞாயமா சுசி?"

"இன்னிக்கு இந்தியா - இங்கிலாந்த் மேட்ச் இருக்கு பாக்குறியா?" என்றாள்.... 

மரத்தையெல்லாம் வெட்டி சாய்ச்சுடோம்.... தோப்பு துரவுன்னு எல்லாத்தையும் அழிச்சிட்டு வரோம்... இதனால நிறையா தீவுகள் இல்லாம போகறத்துக்கு வாய்ப்பிருக்கு.... மனுஷங்களும், விலங்குளும் இறந்து போகற நிலைமை வரும்.... நம்ம அழிவுக்கு நாமே காரணமா இருக்கனுமா? 

"இப்போ உனக்கு என்ன வேணும்?" சூடா ஒரு கப் காபி குடிச்ச நீ தெளிஞ்சுடுவ..."
நாம் படபடத்து போனேன்.... நான் அனாவசியமாய் பேசுகிறேனோ..? முளை குழம்பியது.... நானும் தினம் தினம் இப்படி யோசிப்பதில்லை.... இன்று ஏன் இப்படி..? புரியவில்லை...  எனக்கு எங்கிருந்து வந்தது பூமி மீது இப்படி ஒரு அக்கறை....கண் மூடி அமர்ந்திருந்தேன்.... காபியும் வந்தது!

"வேற ஏதாவது பேசு" என்றாள் சுசி...

சோர்ந்து போய், காபியை குடிக்க முற்பட்டேன்.... காபியின் வெப்பம், நாக்கில் படர்ந்து.... நெஞ்சை சுட்டது....









Monday 6 December 2010

அப்பாவுக்காக

கடற்க்கரையோரமாய் காதலர்கள் கூட்டம் நிரம்பிக் கடக்க, அவர்கள் கால்களை மெல்லத் தழுவி நகர்ந்து கொண்டிருந்தது அலை... நதியா தனியாய் அமர்ந்து, மணலில் எதோ வரைந்து கொண்டிருந்தாள்...

நதியா.. ரொம்ப நேரமா காத்திருக்கியா..?? என்றபடி அருகில் வந்து அமர்தான் ஆகாஷ்.

"இல்ல இப்போ தான் வந்தேன்" என்று சொல்லி அமைதியானாள் நதி... ஆகாஷ் அவளை அப்படித்தான் அழைப்பது வழக்கம்.

அந்த மாலை நேரமும் கடற்க்கரை ஓரமும் எல்லா காதலர்களுக்கும் சுகிப்பை தந்து விடுவதில்லையே.. அப்படித்தான் அன்று இவர்களுக்கும் சோகமான மாலைப் பொழுது.

நீண்ட நேர அமைதிக்குப் பின்...

நதி.. நீ உங்க அப்பா சொல்லற மாதிரி அந்த டாக்டர் அரவிந்தையே கட்டிக்கோ...

அவளோ.. காதலனுக்காக தந்தையை மறப்பதா.. இல்லை தந்தைக்காக காதலனை துறப்பதா என போராடிக் கொண்டிருந்தாள்..

ஆகாஷும் நதியும் படித்து ஒரே கல்லூரியில். அவர்கள் காதலுக்கு எப்படியும் ஆறு வயது இருக்கும்.

நதி விவரம் அறிந்த நாளிலிருந்தே தாய் முகம் அறியாதவள். அதனால் அவள் மீது உயிரையே வைத்திருக்கும் அப்பாவுக்காக தன் காதலை மறக்கவும் முடியாமல் தொடரவும் முடியாமல்... திணறிக் கொண்டிருகிறாள். ஒருமுறை அப்பாவிடம் ஆகாஷைப் பற்றி பேச்செடுத்த போது.. அவர் கோபப்பட்ட விதம்... இனி அவள் அவன் பெயரையே எடுக்க முடியாமல் செய்துவிட்டது!

இப்போ என்ன பண்றது... நாம ரெண்டு பெரும் பிரியறது தான் எங்க அப்பாவோட ஆசை... என்ன வேற ஒருத்தருக்கு கட்டி வெச்சுட்டு அவர் வேலையைப் பாத்துட்டு போய்டுவாரு.... அப்புறம் நான் தான் காலமெல்லாம் உனக்கு நம்பிக்கை துரோகம் பண்ணிட்டத நினைச்சு அழனும்...

என்ற கதறி அழுதவளை தன் தோளோடு சேர்த்துக் கொண்டான்...

எங்க அப்பாவுக்கு அடுத்ததா என் மனசுக்குல ஒருத்தர் இருக்க முடியும்னா அது நீ மட்டும் தான் ஆகாஷ்...

விம்மி விம்மி அழுதவளை வானமும் கடலும் பாவமாய் பார்த்தன..

மனது கனமாகி கண்ணீர் துளிர்க்கும் போது அதை சொல்லி அழுதால் ஓரளவு நிம்மதி கிடைக்கும்... ஆனால், காதலின் வலியை எத்தனை சொன்னாலும் அப்படியே தான் இருக்கும் போலும்...

நதி அழாதடா.. நானும் செதுதுக்கிட்டு இருக்கேன்... உன்ன உங்க அப்பாக்கிட்டேர்ந்து பிரிச்சு கூட்டிட்டு போற அளவுக்கு நான் ஒன்னும்சுயனலவாதி இல்ல...உங்க அப்பா ஏற்க்கனவே ஹார்ட் பேஷன்ட்.... அப்படி அவர கொன்னுட்டு தான் நாம வாழனுமா.... வேண்டாம் நதி...

அந்த நிமிடம் வரை அவளுக்கு தையரியம் சொன்ன அவன்... இப்போது கலங்கினான்...

எதோ ஒரு நினைப்புல.. நீ அந்த டாக்டர் பையன கட்டிக்கோன்னு சொல்லிட்டேன் ஆனா.... உன்னப் பிரிஞ்சு இந்த உலகத்துல ஒரு நிமிஷம் தனியா நிக்குற தையரியம் எனக்கு இல்ல நதி...

அவனது குரல் உடைந்தது!!!

உன்கிட்ட இதுவரைக்கும் நான் ஒண்ணுமே கேட்டதில்ல ஆகாஷ்.... இப்போ ஒன்னு கேக்கனும்னு தோணுது!

கேளுடா...

நீ வேற ஒரு பொண்ண கல்யாணம் பண்ணிப்பேன்னு எனக்கு சத்தியம் பண்ணு..

அந்த நீரின் சாட்சியாய் அவன் பொய் சத்தியம் செய்ய விரும்பவில்லை...

இல்ல நதி... நான் இதப்பத்தி அப்புறம் யோசிக்கறேன்...

வழிகிற விழிநீரை துடைத்துக் கொண்டு அவன் எழுந்தாள்.. "சரி அப்பா நானும் கடைசி வரைக்கும் இப்படியே இருக்கேன். எங்க அப்பாவுக்கு நான் உன் கூட வாழ்றதுல தான் பிரச்சனை... தனிய வாழ்றதுல இல்லையே... " என்று சொல்லி வேகமாய் நடந்தாள்.

"பாத்துப்போ நதி" அவன் மீண்டும் மணலில் விழுந்தான்...

அவள் ஒருநொடி வேகத்தைக் குறைத்துக் கொண்டு... "நீ எப்பவும் சந்தோஷமா இருக்கணும் ஆகாஷ்.. .அது தான் எனக்கு வேணும்" என்று சொல்லிவிட்டு சென்றாள்.

நதியின் வீட்டில் தினம் தினம் ஏதாவது ஒரு பிரச்சனை... இவள் திருமண பேச்சை எடுப்பதும் அது சண்டையில் முடிவதுமாய், நாட்கள் நகர்ந்தோடின...

ஒருநாள், அவளது அப்பா தற்கொலைக்கு முயல... முற்றிலும் உடைந்து போனாள் நதி...

அப்பா எனக்கு நீங்க வேணும்... இன்னுமொரு தடவ இப்படி பண்ணமாட்டேன் எனக்கு சத்தியம் பண்ணுங்கப்பா...

அன்று அவள் அழுதபோது.. கண்ணீரோடு சேர்த்து அவள் காதலும் சந்தோஷமும் கரைந்து போனதென்று அவளது அப்பா அறியவில்லை..

"ஆகாஷ், உனக்கு எதோ தபால் வந்திருக்கு" என்று சொல்லிக் கொண்டு.. ஆகாஷின் அம்மா அவன் படுக்கை அறைக்கு வருவதை உணர்ந்து, அவன் கையிலிருந்த வளையல் துண்டுகளையும் வாழ்த்தட்டைகளையும் தலையணைக்கடியில் பதுக்கினான்...

என்னம்மா...

உனக்கு எதோ தபால் வந்திருக்கு... இந்தா பிடி... 

கொடுத்துவிட்டு நகர்ந்தாள்.

அன்புள்ள என்று எழுதி, அதை அடித்துவிட்டு மரியாதைக்குரிய ஆகாஷுக்கு என்று தொடங்கிய கடிதத்தோடு ஒரு பத்திரிக்கையும் இருந்தது.

நதியாவின் திருமண அழைப்பிதழ்.  "நதியா வெட்ஸ் டாக்டர் அரவிந்த்" என்று அச்சிடப்பட்டிருந்தது.

இறுதியாய்....

நான் உன்னை மறந்துவிட்டேன்... நீயும் ஒரு நல்ல வாழ்க்கையை வாழவேண்டும் என்பது மட்டுமே என் ஆசை.. என்ற அவளுக்கு.. என்ன தோன்றியதோ..

உன்னை என்றும் மறவாத நதியா என்று முடித்திருந்தாள்....

ஈரமான விழிகளோடு...

அம்மா... அந்த பொண்ணு வீட்டுக்கு போன் போட்டு எனக்கு சம்மதம்னு சொல்லிடு...

மகனின் மனமாற்றம் அவளுக்கு நிம்மதியை தந்தாலும் அவன் அடைத்திருந்த வேதனைகளை நினைத்து அவளும் துவண்டு போனாள். ஆகாஷ் நதியை பற்றி பேசாத நாளே கிடையாதே. இவன் எப்படி இதை தாங்கிக்கொள்ளப் போகிறான் என்று நினைத்தாலே பயமாய் இருந்தது.

நீ கவலைப் படாதே.... என்று அம்மாவை அணைத்துக் கொண்டான். தாயின் ஸ்பரிசம் அவன் கொண்ட வலிகளுக்கு நிரந்தரமான மருந்தாய் தோன்றியது.

இத்தனைக்குப் பிறகும்... நதி- ஆகாஷின் காதல் தோற்கவில்லை... ஜெய்த்தே இருந்தது :) !!!!

Wednesday 1 December 2010

முதல் காதல்

அழகான காலைப் பொழுதை இன்னும் இனிமையாக்கும்படி சுஜாதா சமயலறையில்  கலறிக் கொண்டு இருந்த கேசரியின் மனம், வீடெங்கும் பரவி, தூங்கிக் கொண்டிருந்த ஹரியின் கம்பளிக்குள் நுழைந்து நாசி தடவியதில், தூக்கம் கெட்டு கண் விழித்தான் அவன்.  இப்படி அம்மாவின் கை மணம் பட்டு கண்விழிக்கும் நாட்களை இனி தவற விடப் போவதை நினைத்தாலே அவன் நெஞ்சம் கனமானது..

ஹரி.. அவனது பெற்றோருக்கு ஒரே மகன். அதற்கே உண்டான செல்லமும் அரவணைப்பும் அளவுக்கு அதிகமாகவே பெற்றிருந்தான். இப்போது பன்னிரெண்டாம் வகுப்பை முடித்துவிட்டு, கல்லூரியில் சேர்ந்திருக்கிறான். அது ஒரு தனியார் கல்லூரி. இவர்கள் இருக்கும் கிராமத்தை விட்டு வெகுதூரத்தில் இருப்பதால், விடுதியில் தங்க வேண்டிய கட்டாயம்.

இதுவரை அவன் கண்டதெல்லாம், அரசு பள்ளியும், ஆலமர நிழலும், அடிக்கடி தடியால் அவனையும் சக நண்பர்களையும் அடித்து அடித்தே பாடம் சொல்லித் தந்த ராமசாமி வாத்தியாரையும் தான். இடைவேளையில் குச்சி மிட்டாயும், குல்பி ஐஸ் தருகிற சந்தோஷத்தையும் தவிர வேறெதையும் அறிந்திடாதவன்.
ஹரியின் தந்தை கதிரேசன்,  அரசுப் பணியில் இருப்பவர். அம்மா சுஜாதா, பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்திருந்த போதிலும் பகுத்தறிவும் சாதூர்யமும் நிறையவே பெற்றிருந்தார்.

" ஹரி" என்று அவனது தந்தை அழைக்க, சட்டேன்று திரும்பிய அவன் கண்களில் அவனை அறியாமலேயே கண்ணீர் திரண்டது.  வீட்டை விட்டு வெளியே போகிற முதல் அனுபவத்தை நினைத்து உடைந்து போயிருந்த அவனை.. தேற்றுவதற்கு முயன்றார் கதிரேசன். 

அப்பா.. நான் அங்க போய் படிக்கல. நான் உங்க கூடயே இருக்கேன்..

ஹரி.. நீ இன்னும் வாழ்கைய சரியா புரிஞ்சுக்கல..  நீ இங்கிருந்து போனா மட்டும் தான் ஒரு நல்ல நிலைக்கு வர முடியும்ங்கற காரணத்தால தான் நானும் அம்மாவும் உன்ன இவ்வளவு தூரம் வர்ப்புறுத்தறோம்.. எங்களுக்கு மட்டும் கஷ்டமா இல்லையா என்ன??

நாட்கள் விரைந்தோடின... ஹரி கல்லூரியில் சேர்ந்து படிக்கத் தொடங்கி மூன்று வருடங்கள் ஓடி விட்டன.... இடையிடையே விடுமுறை நாட்களில் ஒரு சில முறை ஊர் பக்கம் சென்று வந்திருந்தான்.. கல்லூரி, விடுதி வாழ்க்கை.. உணவு...என்று எல்லாமே ஓரளவுக்கு பழகிப் போயிருந்தாலும்,   முன்பு இருந்ததைவிட இரண்டு மூன்று கிலோ எடை குறைந்திருந்தான்...

ஒருநாள் அப்பா அவனை பார்க்க வருவதாக சொல்லி இருக்க, அவரை அழைத்துப் போவதற்காக ரயில் நிலையம் சென்றான்...

அன்னையைப் பார்த்து வெகுநாளானக் குழந்தை எப்படி ஓடி வந்து அவள் கால்களை பின்னுமோ.. அதுபோல் வேகமாய் வந்து நின்றது ரயில்.

அப்பா... எப்டி இருக்கீங்க..அம்மா உடம்புக்கு ஒன்னுமில்லையே...

ஆசையாய் விசாரிக்கிற மகனை அப்படியே அணைத்துக் கொண்டார் கதிரேசன்.  இப்பொது அவன் டீன்ஏஜ் வயதை கடந்துவிட்டத் தோற்றத்தோடும்.. இளமைக்கே உண்டான அழகோடும் கம்பீரத்தோடும் இருபதைப் பார்த்தவர்... தனக்குள் சிரித்துக் கொண்டார்.

நாங்க ரெண்டுபேரும் சௌக்கியமா இருக்கோம்.. நீ எப்டி இருக்க..  ரொம்ப தளர்ந்து போய் இருக்க.. என்ன ஆச்சு ?

அது எல்லாம் ஒண்ணுமில்ல.. நான் நல்லாத்தான் இருக்கேன்.. ஊர்ல எல்ல்லாரும் எப்டி இருக்காங்க..?

நம்ம ராமசாமி வாத்தி, சுஷீலா அக்கா, குமார் மாமா...என அவன் அடுக்கிக் கொண்டே போகையில் அவனது நாக்கில் சிக்கி வெளி வரமுடியாமல் தவித்தது அனிதாவின் பெயர்!  

அனிதா..இந்த பெயருக்கும் அவனுக்கும் உள்ள தொடர்பு இதுவரை அந்த வானும், நம்மை எல்லாம் சுவாசிக்கச்செய்யும் காற்றையும் தவிர யாரும் அறியாதது!

அப்பா.. நான் ஒன்னு கேட்டா தப்ப எடுத்துக்க மாட்டீங்களே...

இல்லப்பா சொல்லு..

நான் உங்ககிட்ட எதையும் மறச்சதில்லப்பா.. இப்பவும் நீங்க எனக்கு ஒரு நல்ல நண்பர்..அப்பறம் தான் அப்பா.. 

இவன் இப்படியெல்லாம் பேசுபவன் இல்லையே என அப்போதே கதிரேசன் மனதில் பொறி தட்டியது!

சொல்லுப்பா ஹரி.. உனக்கு ஏதாவது பிரச்சனையா..??

அதுவந்து... நான் ஒரு பொண்ண விரும்பறேன்..

அதை சொல்லி முடிப்பதற்குள் நெஞ்சம் படபடத்துப் போய்.. முகம் முழுதும் வியர்வைப் பூக்கள் பூத்திருந்தன அவனுக்கு.

அப்பா.. நான் இப்படி பேசறேன்னு தப்ப நினைக்காதீங்க.. நான் அந்த பொண்ண பத்து வருஷமா நினைச்சுகிட்டு இருக்கேன்...நான் ஆறாவது படிக்கும் போது என் கூட படிச்சா... எங்க காதல் வயசு சம்மந்தப்பட்டது மட்டுமில்ல... மனசும் சம்மந்தப்பட்டது!   இப்பவும் உங்களுக்குப் பிடிக்காத எதையும் நான் செய்ய மாட்டேன்... அவ பேரு அனிதா. நம்ம ஊரு தான்.. நல்லப் பொண்ணுப்பா.. 

தொடர்ந்து பேசியவன் திடீரென்று ஒரு நொடி நிறுத்திவிட்டு அப்பாவின் பதிலுக்காக காத்திருந்தான்.. அவர் பேசவில்லை..

அப்பா.. நான் ஏதாவது தப்பா பேசி இருந்தா மன்னிச்சிடுங்க. அவ வீட்ல மாப்பிள்ளை பாக்க ஆரம்பிச்சிடாங்க.. நீங்க தான் உதவனும் பா... 

எனக்கு வேலையும் கிடைச்சிருச்சி.. படிப்பு முடிஞ்சதும் வேலைக்குப் போய் உங்களையும் அம்மாவையும் நிச்சயம் நல்ல வச்சுப்பேன். ப்ளீஸ் பா... என்றவனின் கண்களில் கண்ணீர் மல்கியது!

டேய் ஹரி... என்ன இது... வீட்ல சொல்லாம ஓடிப் போய் வாழ்க்கைய அழிசுக்குற பசங்க மத்தியில.. உன்ன நினைச்சா பெருமையா இருக்கு... பத்து வருசமா அவள காதலிக்கறேன்னு நீ சொன்ன போதே உங்க காதல் மேல எனக்கு மதிப்பு வருது.. நான் வேணுனா கிராமத்து மனுஷனா இருக்கலாம்.. ஆனா மனுஷங்களையும் மனசையும் புரிஞ்சுக்கக் கூடிய சக்தி ஓரளவுக்கு இருக்குடா...

ஆமா.... பள்ளிக்கூடத்துக்குப்  படிக்க போனியா இல்லே... என்று அப்பா நிறுத்த... வெட்கத்தில் லேசாய் தலைக் குனிந்து சிரித்துக் கொண்டான்..

"வாழ்கையை பற்றி ஒன்றுமே தெரியாது உனக்கு" என தான் சொல்லி அனுப்பிய பிள்ளையா இன்று இத்தனை அறிவோடும் அக்கறையோடும் முடிவெடுக்கிற நிலைக்கு வந்திருக்கிறான் என்று நினைத்து ஆனந்தப்பட்டார்  கதிரேசன்!