கவிபாரதி சிறுகதைகள்

Wednesday 1 December 2010

முதல் காதல்

அழகான காலைப் பொழுதை இன்னும் இனிமையாக்கும்படி சுஜாதா சமயலறையில்  கலறிக் கொண்டு இருந்த கேசரியின் மனம், வீடெங்கும் பரவி, தூங்கிக் கொண்டிருந்த ஹரியின் கம்பளிக்குள் நுழைந்து நாசி தடவியதில், தூக்கம் கெட்டு கண் விழித்தான் அவன்.  இப்படி அம்மாவின் கை மணம் பட்டு கண்விழிக்கும் நாட்களை இனி தவற விடப் போவதை நினைத்தாலே அவன் நெஞ்சம் கனமானது..

ஹரி.. அவனது பெற்றோருக்கு ஒரே மகன். அதற்கே உண்டான செல்லமும் அரவணைப்பும் அளவுக்கு அதிகமாகவே பெற்றிருந்தான். இப்போது பன்னிரெண்டாம் வகுப்பை முடித்துவிட்டு, கல்லூரியில் சேர்ந்திருக்கிறான். அது ஒரு தனியார் கல்லூரி. இவர்கள் இருக்கும் கிராமத்தை விட்டு வெகுதூரத்தில் இருப்பதால், விடுதியில் தங்க வேண்டிய கட்டாயம்.

இதுவரை அவன் கண்டதெல்லாம், அரசு பள்ளியும், ஆலமர நிழலும், அடிக்கடி தடியால் அவனையும் சக நண்பர்களையும் அடித்து அடித்தே பாடம் சொல்லித் தந்த ராமசாமி வாத்தியாரையும் தான். இடைவேளையில் குச்சி மிட்டாயும், குல்பி ஐஸ் தருகிற சந்தோஷத்தையும் தவிர வேறெதையும் அறிந்திடாதவன்.
ஹரியின் தந்தை கதிரேசன்,  அரசுப் பணியில் இருப்பவர். அம்மா சுஜாதா, பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்திருந்த போதிலும் பகுத்தறிவும் சாதூர்யமும் நிறையவே பெற்றிருந்தார்.

" ஹரி" என்று அவனது தந்தை அழைக்க, சட்டேன்று திரும்பிய அவன் கண்களில் அவனை அறியாமலேயே கண்ணீர் திரண்டது.  வீட்டை விட்டு வெளியே போகிற முதல் அனுபவத்தை நினைத்து உடைந்து போயிருந்த அவனை.. தேற்றுவதற்கு முயன்றார் கதிரேசன். 

அப்பா.. நான் அங்க போய் படிக்கல. நான் உங்க கூடயே இருக்கேன்..

ஹரி.. நீ இன்னும் வாழ்கைய சரியா புரிஞ்சுக்கல..  நீ இங்கிருந்து போனா மட்டும் தான் ஒரு நல்ல நிலைக்கு வர முடியும்ங்கற காரணத்தால தான் நானும் அம்மாவும் உன்ன இவ்வளவு தூரம் வர்ப்புறுத்தறோம்.. எங்களுக்கு மட்டும் கஷ்டமா இல்லையா என்ன??

நாட்கள் விரைந்தோடின... ஹரி கல்லூரியில் சேர்ந்து படிக்கத் தொடங்கி மூன்று வருடங்கள் ஓடி விட்டன.... இடையிடையே விடுமுறை நாட்களில் ஒரு சில முறை ஊர் பக்கம் சென்று வந்திருந்தான்.. கல்லூரி, விடுதி வாழ்க்கை.. உணவு...என்று எல்லாமே ஓரளவுக்கு பழகிப் போயிருந்தாலும்,   முன்பு இருந்ததைவிட இரண்டு மூன்று கிலோ எடை குறைந்திருந்தான்...

ஒருநாள் அப்பா அவனை பார்க்க வருவதாக சொல்லி இருக்க, அவரை அழைத்துப் போவதற்காக ரயில் நிலையம் சென்றான்...

அன்னையைப் பார்த்து வெகுநாளானக் குழந்தை எப்படி ஓடி வந்து அவள் கால்களை பின்னுமோ.. அதுபோல் வேகமாய் வந்து நின்றது ரயில்.

அப்பா... எப்டி இருக்கீங்க..அம்மா உடம்புக்கு ஒன்னுமில்லையே...

ஆசையாய் விசாரிக்கிற மகனை அப்படியே அணைத்துக் கொண்டார் கதிரேசன்.  இப்பொது அவன் டீன்ஏஜ் வயதை கடந்துவிட்டத் தோற்றத்தோடும்.. இளமைக்கே உண்டான அழகோடும் கம்பீரத்தோடும் இருபதைப் பார்த்தவர்... தனக்குள் சிரித்துக் கொண்டார்.

நாங்க ரெண்டுபேரும் சௌக்கியமா இருக்கோம்.. நீ எப்டி இருக்க..  ரொம்ப தளர்ந்து போய் இருக்க.. என்ன ஆச்சு ?

அது எல்லாம் ஒண்ணுமில்ல.. நான் நல்லாத்தான் இருக்கேன்.. ஊர்ல எல்ல்லாரும் எப்டி இருக்காங்க..?

நம்ம ராமசாமி வாத்தி, சுஷீலா அக்கா, குமார் மாமா...என அவன் அடுக்கிக் கொண்டே போகையில் அவனது நாக்கில் சிக்கி வெளி வரமுடியாமல் தவித்தது அனிதாவின் பெயர்!  

அனிதா..இந்த பெயருக்கும் அவனுக்கும் உள்ள தொடர்பு இதுவரை அந்த வானும், நம்மை எல்லாம் சுவாசிக்கச்செய்யும் காற்றையும் தவிர யாரும் அறியாதது!

அப்பா.. நான் ஒன்னு கேட்டா தப்ப எடுத்துக்க மாட்டீங்களே...

இல்லப்பா சொல்லு..

நான் உங்ககிட்ட எதையும் மறச்சதில்லப்பா.. இப்பவும் நீங்க எனக்கு ஒரு நல்ல நண்பர்..அப்பறம் தான் அப்பா.. 

இவன் இப்படியெல்லாம் பேசுபவன் இல்லையே என அப்போதே கதிரேசன் மனதில் பொறி தட்டியது!

சொல்லுப்பா ஹரி.. உனக்கு ஏதாவது பிரச்சனையா..??

அதுவந்து... நான் ஒரு பொண்ண விரும்பறேன்..

அதை சொல்லி முடிப்பதற்குள் நெஞ்சம் படபடத்துப் போய்.. முகம் முழுதும் வியர்வைப் பூக்கள் பூத்திருந்தன அவனுக்கு.

அப்பா.. நான் இப்படி பேசறேன்னு தப்ப நினைக்காதீங்க.. நான் அந்த பொண்ண பத்து வருஷமா நினைச்சுகிட்டு இருக்கேன்...நான் ஆறாவது படிக்கும் போது என் கூட படிச்சா... எங்க காதல் வயசு சம்மந்தப்பட்டது மட்டுமில்ல... மனசும் சம்மந்தப்பட்டது!   இப்பவும் உங்களுக்குப் பிடிக்காத எதையும் நான் செய்ய மாட்டேன்... அவ பேரு அனிதா. நம்ம ஊரு தான்.. நல்லப் பொண்ணுப்பா.. 

தொடர்ந்து பேசியவன் திடீரென்று ஒரு நொடி நிறுத்திவிட்டு அப்பாவின் பதிலுக்காக காத்திருந்தான்.. அவர் பேசவில்லை..

அப்பா.. நான் ஏதாவது தப்பா பேசி இருந்தா மன்னிச்சிடுங்க. அவ வீட்ல மாப்பிள்ளை பாக்க ஆரம்பிச்சிடாங்க.. நீங்க தான் உதவனும் பா... 

எனக்கு வேலையும் கிடைச்சிருச்சி.. படிப்பு முடிஞ்சதும் வேலைக்குப் போய் உங்களையும் அம்மாவையும் நிச்சயம் நல்ல வச்சுப்பேன். ப்ளீஸ் பா... என்றவனின் கண்களில் கண்ணீர் மல்கியது!

டேய் ஹரி... என்ன இது... வீட்ல சொல்லாம ஓடிப் போய் வாழ்க்கைய அழிசுக்குற பசங்க மத்தியில.. உன்ன நினைச்சா பெருமையா இருக்கு... பத்து வருசமா அவள காதலிக்கறேன்னு நீ சொன்ன போதே உங்க காதல் மேல எனக்கு மதிப்பு வருது.. நான் வேணுனா கிராமத்து மனுஷனா இருக்கலாம்.. ஆனா மனுஷங்களையும் மனசையும் புரிஞ்சுக்கக் கூடிய சக்தி ஓரளவுக்கு இருக்குடா...

ஆமா.... பள்ளிக்கூடத்துக்குப்  படிக்க போனியா இல்லே... என்று அப்பா நிறுத்த... வெட்கத்தில் லேசாய் தலைக் குனிந்து சிரித்துக் கொண்டான்..

"வாழ்கையை பற்றி ஒன்றுமே தெரியாது உனக்கு" என தான் சொல்லி அனுப்பிய பிள்ளையா இன்று இத்தனை அறிவோடும் அக்கறையோடும் முடிவெடுக்கிற நிலைக்கு வந்திருக்கிறான் என்று நினைத்து ஆனந்தப்பட்டார்  கதிரேசன்!  


4 comments:

  1. உறவை சொன்னவிதமும்
    காதலை கண்ட விதமும்
    சிறப்பாய் இருந்தது
    நிறைய எழுதுங்கள்
    வாழ்த்துக்கள்

    ReplyDelete